பக்கங்கள்

தாட்... பூட்... தஞ்சாவூர் !!!

பேமானி…!! கஸ்மாலம்….!! எங்கேயா பாக்குறீயே.. இங்க பாருடா…. காத இங்க கொடுத்துட்டு கவனத்த எங்கேயோ வைச்சிருக்கியேடா…. பொறம்போக்கே….
சொல்றத கேட்டு அத யோசிடா என் யோக்கியரே….!!!

என் குடியிருப்பின் கதவு தாண்டி, என் காதை குடைந்தது இந்த வசவு சொற்கள். என்ன ஒரு துணிச்சல்… என் எதிரிலே என்னை திட்டும் எகத்தாளம். வார்த்தைகளில் உணர்த்த இயலாத மகா எரிச்சல் எனக்குள் மண்டியது. மனதிற்குள் நானும் திட்ட துவங்கினேன். சே!!! தொடங்கிட்டாண்டா தொம்ஸ் கட்டை!!!, ஏண்டா எமப் பய மவனே! உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா.

என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு, காலைல ஏந்திருச்சு, அரக்க பரக்க கொட்டிக்கிட்டு, ஆபிஸ்ல போயி குத்தும் குடைச்சலும் வாங்கி அதத் தாங்கி, குத்துயிரும் குலையுயிருமா வீட்டுக்கு வந்தா. வீடு சும்மா… சுகமாவா இருக்கு, இங்க பல கொடுமைகள் இங்க ஜிங்கு ஜிங்குன்னு ஆடுது. பால்காரன், வாடகை, கரண்டு பில், பைப்பில தண்ணீ வரல இப்படி ஓராயிரம் பிரச்சனை. குத்துதே குடையுதேன்னு நான் யாருகிட்ட போய் கத்துறது. நான் என்ன செய்யுறது, எதை காப்பாத்துறது. வீடு, ஆபிஸ், சமூகம்ன்னு மொத்தக் குத்தகையில குத்துது. கோபம் இயலாமையை இடித்துரைக்க, என் கோபம் லேசாய் அழுகையாக ஆனது. மனதிற்குள் ஒரு விசும்பல்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி. ஊரும் உலகமும் நல்லா சுகமா இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை. என்ன வரம் வாங்கி வந்தேன் இப்படி. அழுகையில் கரைய என்னை நான் அனுமதித்தேன். அந்த உணர்வில் சில நிமிடங்கள் நகர, மேலும் மேலும் நான் அதில் கரைய, வேறு சிந்தனைகள் அற்றுப் போயிற்று.

அதில் ஒரு சுகம் தெரிந்தது. உடல் அசையாது, உணர்வு மட்டும் விழித்து இருந்தது. குளிர் பழகிய அல்லது பாதித்த உடல், சுள்ளென சூரிய கதிர்கள் படும்போது மனம் ஸ்தம்பித்து மோன நிலையில் இருக்குமே, இன்னும் இன்னும் என ஏங்குமே. சிந்தனை எதுமில்லாமல் சோம்பலாய் முடங்கி நிற்குமே அது போல் ஒரு நிலை. இப்போது வெளிக்குரல் இல்லை. ஹப்பா!!! போயிட்டான் போலருக்கு

மெல்லமாய் தலை நீட்டி வெளியில் பார்த்தேன். எங்கும் போகவில்லை அங்கேயே தான் இருக்கிறான். உக்கிரமாய் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தவன், அசிங்கமாய் நின்று கொண்டிருந்தவன், இப்ப மண்டையை சொறிந்து கொண்டு உட்கார்ந்திருக்கான். அவ்வளவுதான். சே!!! நாத்தம் குடல புடுங்குது. அழுக்கும் தூசியும் அவனை அப்பி பிடித்திருக்க, அவனை பார்ப்பதே ஒரு தண்டனை. யேயப்பா!!! என்ன உயரம், நிச்சயம் ஒரு ஏழடி இருப்பான். அசப்பில் என் உடல் மற்றும் முகவெட்டு. ம்….. உடல் அசைவில் கூட என்னை மாதிரியே.

எனக்கு மட்டும் இல்லை. பக்கத்து வீட்டு ராமசாமிக்கும்... ராமசாமி உருவத்தில் இதுபோல் ஒரு தொல்லை. ராமசாமியை பார்த்து உரத்த குரலில் திட்டிக் கொண்டிருக்கிறான். என்ன ஒரு வித்தியாசம் என் தொல்லை போல உயரம் இல்லை, குள்ளமான உருவம், கூடிப்போனால் ஒரு நாலடி இருக்கும். என்றாலும் ராமசாமி நல்ல உயரம், அவன் ஆறடி நாலங்குலம் இருப்பான். எதிர்வீட்டு ஏகாம்பரத்துக்கும் எங்களை மாதிரியே. அழுக்காய், நாத்தமாய் அவனுக்கும் இதே தொல்லை.

எனக்கு திட்டு தூய செந்தமிழில். ராமசாமிக்கு அக்மார்க் கெட்ட வார்த்தையில் அன்னிய பாஷையில் திட்டு. ஆங்கிலம் ஸ்டைலாக இருந்தாலும், சே… வாயில் சொல்ல முடியாத அசிங்க அசிங்க வார்த்தைகள். அடப் பாவிகளா!! இந்த குடியிருப்பு மொத்தத்துக்கும் இப்படி ஒரு தொல்லையா. இப்படி குத்தகை எடுத்துக்கிட்டு குத்துறாங்களே… இவனுங்கள கேக்க யாருமே இல்லியா…. சரி யாரிவனுங்க…. ஏன் இந்த பாடு படுத்துறானுக… எல்லாருக்கும் இப்படி ஒரு அவஸ்தை இருக்கே. என்ன இது.

உடல் சோபாவில் தளர்ந்தது. மூச்சு நீண்ட தாள லயத்தில் ஆழமாக ஆனது. இவனுங்க திட்டுதலை தாண்டி என்ன சொல்றானுங்கன்னு கேட்டதில்லையே. அரை குறையா சில வார்த்தைகள் காதில விழுது. திட்டுற வார்த்தையிலயும் இவனுங்க நாத்தத்துலயுந்தான் நம்ம திங்கிங் போகுதே இல்லாம…. நம்மால கான்சேண்ட்ரேட் பண்ண முடியல. சரி இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு எடுத்துறுவோம்.

ஒண்ணு நான், இல்லைன்னா அவன்…. அவனுக்காச்சு எனக்காச்சு.

அவனை உள்ளே வர அனுமதித்தேன். கதவு திறந்து அவன் உள் நுழைந்ததும் நான் அதிர்ச்சியானேன். கண்கள் நிலை குத்தின. கண்கள் மூடி திறந்து என்னை நானே சோதித்து கொண்டேன்.

நான் பார்ப்பது சரியா, ஏதேனும் பார்வைக் கோளாறா, என்பது போல் கண்ணை மூடி மூடி பார்த்தேன். என்ன இது … எப்படி இது…. சரி!!! அப்படி என்ன ஆச்சரியம் எனக் கேட்கிறீர்களா.

வெளியில் இருந்து அவன் கத்திய போது, அவனுக்கு ஏழடி உயரம் இருந்தது, இப்போதோ 1 அடிக்கும் கீழே…. வெளியில் இருந்து அவன் கத்திய போது அழுக்கும், நாத்தமும்… இப்போதோ அவன் மீது நறுமணம் கமழும் நல்ல வாசனை.

பேச்சு வராமல், நான் திகைத்து நிற்க, அவன் தான் தொடங்கினான், ம்… அன்பிற்குறிய என்னவனே… எப்படி இருக்கிறாய். எப்போதோ என்னை உள்ளே அழைத்திருக்கலாம். ஏன் பயந்தாய். ஏன் இன்னமும் தெளிவில்லாமல் இருக்கிறாய்…. நிச்சயம் நான் உன் நண்பன் தான், உன் முன்னேற்றம் தான் என் விருப்பம்.

அதெல்லாம் இருக்கட்டும் நீ யார்,

நான்????…. அட… என்னை தெரியாதா… நான் தான் நீ. உன் மனதின் ஒரு மலர் நான்.

குழப்பாதே நீ யார்.

உன்னை செப்பனிடுவது யார் யார். மனசு, சிந்தனை, மனசாட்சி. இப்படி பல பெயர்கள் இருக்கலாம். பெயரா முக்கியம், செயல் தானே முக்கியம், உன்னை செயல் படுத்துவது எனது வேலை. உன்னை நெறிப்படுத்தி, ஆலோசனை வழங்குவது எனது வேலை.

இந்த பதிவின் தலைப்பை தமிழில் அர்த்தம் சொல்லுங்களேன், எதிரில் இருந்த குள்ளன் என்னிடம் கேட்க, தலையை சொறிந்தவாறு படுக்காளி இட்ட தலைப்பை ஸ்கோர்ல் செய்து பார்த்து, சொன்னேன். ‘குய்யோ முறையோ என கத்தி…. தாட் பூட்!!! தாம் பூம்!!! என பேசுவது அல்லது குதிப்பது.

ஆஹா!! அற்புதமான விளக்கம். ஆம், தமிழில் இதன் அர்த்தம் சொல்வது பிரச்சனை விளக்கம். அதற்கான தீர்வும் அதே வார்த்தை பதத்தில், அதே தலைப்பில் இருக்கிறது. என்ன கொஞ்சம் சௌகரியக் குறைவாய் ஆங்கிலத்தில் உள்ளது. நே!!!! என விளித்தேன்.

குள்ளனை பார்த்து கேட்டேன், ஆமா இந்த பதிவு தலைப்பிலேயே கேள்வியும் பதிலும் இருக்குன்னு பதிவு எழுதுற படுக்காளிக்கு தெரியுமா… என நான் கேட்டவுடன். கலகலவென சிரித்து சொன்னான். பாவம் படுக்காளி, அவன் ஒரு புள்ள பூச்சு, அப்புராணி. தமிழ் மட்டுந்தான் அவனுக்கு தெரியும், இங்கிலீஷ்ல அதுக்கு சொல்யூஷன இருக்கிறது எனக்கு மட்டுந்தான் தெரியும், இப்ப உனக்கு அத சொல்லப் போறேன்…

நான் சுவாரசியமானேன்…… ஆர்வம் மேலிட சீட்டின் நுனி நகர்ந்து காதை தீட்டிக் கொண்டேன். மனதிற்குள் நமட்டுச் சிரிப்பு, ‘அப்போ என்ன சொல்ற, படுக்காளிக்கு இந்த விசயம் தெரியவே தெரியாதா…. ஐய்யோ… ஐய்யோ….’

நன்றாக் கேட்டுக்கோ…. என்னை அனுமதித்து உள் வர அனுமதித்தாயல்லவா அதில் இருக்கிறது உனது வெற்றி. பயப்படாதே, அமைதியாய் அன்பாய் என்னை பேச விடு, நான் சொல்வதை கேள். ஏழடி என நீ நினைத்தது ஓரடி தானே…. அழுக்கு என நீ நினைத்தது இல்லை தானே. ஆம் என்னை அனுமதிக்கும் மனப் பக்குவம் வருவது தான் சிரமம். வந்து விட்டால் எல்லாம் வெற்றிதான். உனக்கு வெளியில் இருந்து உரக்கச் சொல்ல ஆள் இல்லையென்றால் மனிதனான் நீ மகான் ஆகிவிடலாம். இது நீ நினைப்பது போல் மிகச் சிரமமான காரியம் இல்லை. ஈசிதான்….

ராமசாமியும் ரங்கசாமியும் உள்ளே அனுமதிக்காமலேயே செத்து கூட போகலாம். சரி இது தான் அந்த ரகசியம். மூன்று வார்த்தை பதங்கள்

தாட் என்பது நினைவு,

பூட் என்பதில் காலுக்கு செருப்பு / எட்டி உதை… செய்தால் மீண்டும் தமிழுக்கு வருகிறது.

தஞ்சாவூர் – பெரிய கோவில் கற்றளி

உன் நினைவுகளை நெறிப்படுத்தினால் நீயும் தஞ்சை கோவில் போல் சந்திர சூரியர் உள்ளவரையிலும் நிலைத்து நிற்கும் சாஸ்வதம் அல்லது சாதனை படைப்பாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக