பக்கங்கள்

ஆன்மீக அல்வா – (பகுதி – 3)

கிரிக்கெட்டில மட்டை எடுத்துட்டு போன, நம்ம எதிரி வட்டமா ஒரு முட்டை வாங்கினா டக் அவுட், எல்லா விக்கெட்டையும் வச்சிக்க நீன்னு நம்மகிட்ட கொடுத்து ஆப்போஸிட் பார்ட்டி அப்பிட் ஆயிட்டா ஆல் ஆவுட், டிரெயின்ல டிக்கட் எடுக்கலேன்னா வித் அவுட், நம்ம ஆன்மீக அல்வா தொடர் சூப்பர் ஹிட்டு என தமிழிஸில் தாங்கள் அளிக்கும் வாக்குகளுக்கும், தொடர் ஆதரவுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

நான் பெரிதும் நேசிக்கும் ஒரு நண்பர், உங்க கார்ட்டூன் எல்லாம் பிரமாதம் என உன்னிப்பாய் கவனித்து விட்டு மின்னஞ்சலில் சொன்னார். அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. சென்ற பகுதியில் ஒரு கார்ட்டூன், என் புருசன் என்னை மானே மானேன்னு கூப்பிடுறாரு, அதனால இனி நாந்தான் மான், நீ வேற பேரு வைச்சுக்கோ என ஒரு கார்ட்டூன். மனித வாழ்க்கையில், மாறுமா நம் அடையாளங்கள்??? சமூகம் நம் மேல் பூசும் வண்ணப் பூச்சு எப்படி நம்மை மாற்றியமைக்கின்றன, என சொல்வதற்காக சித்தரிக்கப்பட்டது. ஆழமான கருத்துக்களை எளிமையாய், எபக்டிவ்வாய் சொல்ல கேலிச்சித்திரம் கை கொடுக்கிறது.

ஒரு நண்பர் மட்டும் அக்கரையாய் என்னருகில் வந்து, இந்த தொடர் கலகலப்பாய் செல்கிறது, வழுக்கிட்டு வாய்க்கால்ல போறா மாதிரி இருக்கு, சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை, என்றாலும் ஆன்மீகம் என ஆரம்பித்து விட்டு இப்படி பொறுப்பில்லாமல் கொண்டு செல்லலாமா என கேட்க, அவரின் உண்மை அக்கரையை மனதில் கொண்டு சொன்னேன். செய்துறலாமுங்க, நிச்சயம் ஆரோக்கியமா ஆழமான ஒரு மாறுதல் கொண்டு வர திட்டம் இருக்கு. இதை விளக்கமாய் சொல்கிறேன், வாருங்களேன் அடுத்த பாராவுக்கு.


உங்கள் அலுவலக மேஜை, அல்லது அதன் மேஜை டிராயர், இல்லை வீட்டு அலமாரி ஏன் ஒரு பைல் இப்படி மேற்கூரிய சமாச்சாரங்கள் நிரம்பி வழியும் ஒரு தருணத்தில் இனி காற்று கூட இதில் வைக்க முடியாது என ஒரு நிலை வரும்போது, வேற வழியே இல்லாமல், ஓகே!!! ஒதுங்க வைக்கிறேன் என அடுக்க தொடங்குவோம். நிச்சயம் இது மாதிரி ஒரு அனுபவம் நம் வாசக நேயருக்கு இருக்கும் என நம்புகிறேன், இல்லையா உடனே செய்து விடுங்கள்.

ஒதுங்க வைக்கிறேன் என சொல்லி என்ன செய்வோம், ஒவ்வொண்ணாய் வெளியே எடுத்து அதனதன் பிரிவில் (categorize) வைப்பது முதல் வேலை. அடுத்தது, சே இன்னுமா இத வச்சிகிட்டு இருக்கோம், என அவசியமில்லாததை தூக்கி கடாசுவோம், பின்னர் எல்லாவற்றையும் வெளியே எடுத்து வைத்த்தால் இருக்கும் வெற்றிடத்தை வெறிப்போம், அந்த அந்தகாரத்தை அறிந்ததால் அதன் அளவு, இயல்பு எல்லாம் நமக்கு தெளிவாய் தெரியும்.
இனி ஒவ்வொன்றாய், நமக்கு தேவையானதை அவசியமானதை உள்ளே வைத்து முடிக்கும் போது, ஹேய்... அதெப்படி இன்னும் நிறைய இடம் இருக்கே, இன்னும் ஒரு வண்டி சாமான உள்ள வைக்கலாமே என தோணும். அதெப்படி கொஞ்ச நேரத்துக்கு முன்னால காத்த கூட வைக்க முடியாதுன்னு யோசிச்ச இடத்துல எப்படி இவ்வளவு இடம் கிடைச்சுது.

இதுதான் நேயர்களே நம்மை நாம் ஒருங்கிணைப்பது. நம் பழக்கங்கள், செயல்கள், சிந்தனைகள், வேல்யூ சிஸ்டம், போக தீர்மானித்த பார்வை என எல்லாவற்றையும் வெளிய எடுத்து வைத்து அவற்றை புரிந்து அல்லது பிரிச்சு மேஞ்சுட்டு அப்பாலிக்கா அடுக்கினா வாழ்க்கைல அமைதியும் சமாதானமும் தெளிவும் இருக்கும் என நம்புகிறேன். நம் வாழ்க்கையை இப்படி அடிக்கடி அடுக்கி வைத்தால் அம்சமானது, சரி அடிக்கடி செய்ய முடியலேன்னா கூட, எப்பவாவது ஒரு முறை அடுக்கி வைக்க வேண்டும் எனும் கோரிக்கைதான்.

ஐ ம் சாரி, டைம் இல்ல, நான் ரொம்ப பிஸி என பீலா உடுவது யாரை திருப்திபடுத்த.... யோவ் அதுதான் தெரியுமேயாய்யா ஒரு நாளைக்கு 24 மணி நேரம்ன்னு பின்ன நேரம் இல்லன்னா எப்படி. சும்மா ஓடி ஓடி ஒஞ்சு போறதுல என்ன அர்த்தம்ன்னு. கோபக்கார கோவிந்தன் கேக்குறாரே.... அது சரிதானான்னு தோணுது. நம் அடிப்படைகளை புரிந்து தேவைகள் தெரிந்து நமக்கு வேண்டிய லக்கேஜூடன் பயணம் செய்தால், நம் வாழ்க்கை எனும் பயணம் சிறப்பானதாகும்.

ஆன்மீகம் என நிறைய தகவல்களை சேர்த்து வைத்து அமுக்கி வைத்து திணறிக் கொண்டு இருக்கிறோமே, கடவுள்ன்னா என்ன, விதின்னா என்ன, வாழ்வின் நோக்கம்ன்னா என்ன, நித்திய வாழ்வு சாத்தியமா என எத்தனை எத்தனை கேள்விகள். ஆனாலும் பாருங்களேன் நம் ஆன்மீக சிந்தனைகளில் நிறைய பயம்தான் இருக்கிறது. இந்தா போறாரே அவரு ரொம்ப நல்லவரு.... காட் பியரிங் மேன்..... என சுட்டிக் காட்டி, கடவுளுக்கு பயந்தவர் சமூகத்தில் மரியாதைக்குறியவர், நம்பிக்கைக்குரியவர்.

கடவுளுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் எனும் பூச்சாண்டி அவசியமா அல்லது, காட் இஸ் லவ், அன்பே கடவுள் என அதிரடியாய் சொல்லி கடவுளை அன்போ காதலோ செய்ய முடியுமா. சுமை சுமந்து சோர்ந்து போயிருக்கும் நம் நண்பர்களுக்கு முதுகு சொறிந்து விடும் நோக்கம் அல்ல இத்தொடர், அவர்கள் சுமைகளுக்கு சும்மாடு தர முடியுமா, அல்லது சிலவற்றை தூக்கி கடாச முடியுமா என அக்கரையுடன் யோசித்தே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என மேலும் அவரை சமாதானம் செய்ய ஒரு குட்டியாய் கதை சொன்னேன்.

உலகின் மிக சிறந்த பல் டாக்டர் ஜப்பான்ல இருந்தாரு, அவரு பேரு மிஸ்டர். பிரிச்சு மேஞ்சுருவார். அவர்கிட்ட டிரிட்மெண்ட் எடுத்துக்கலாம்ன்னு எட்டூரூ கடியூரப்பா போனாராம். கடவாய்ல ஒரு சொத்தை பல்லு அதை வலிக்காம ரூட் கேனல் பண்ணுங்கன்னு டாக்டருக்கு கோரிக்கை வைச்சாராம். போயி உக்கார்ந்தவுடனே யூ சி டாக்டர், எனக்கு என்னாச்சுன்னா நீட்டி முழங்க, டாக்டர் உஷ்ன்னு சொல்லி ரஜினிகாந்த் பாட்ஷா ஸ்டைல்ல கையை சுழற்றி காட்டி, சூக்கிமின்னா சூட்டிங்கா சூல்பிச்சுன்னாராம்.

எடியூரப்பாக்கு ஒண்ணும் புரியல, டெண்டல் டேபிள்ல உக்கார்ந்த்தும், கடந்த ரெண்டு வருசமான்னு மறுபடி தொடங்க, பாட்ஷா ஸ்டைல்ல மறுபடி கைய சுழற்றி சூக்கிமின்னா சூட்டிங்கா சூல்பிச்சுன்னாராம். எடியூரப்பா பேசாம இருந்துட்டாரு. வேலையெல்லாம் முடிஞ்சதும், சூப்பர், யப்பாடி, எவ்வளவு தொந்தரவு கொடுத்துக்கிட்டு இருந்துச்சு இந்த பல்லு. நச்சுன்னு சரி பண்ணிட்டீங்க. நான் நினைச்சதவிட நல்லா முடிஞ்சுது, இருந்தாலும் நடு நடுவே ஏதோ பாட்ஷா ஸ்டைல்ல கைய சுழற்றி சுழற்றி சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தம்முன்னு கேட்டாராம்.

மெல்லிசா சிரிச்சுகிட்டே டாக்டர் சொன்னாராம். நல்லா தெரியுமூங்கோ.... ஐ நோ மை ஜாப், ஐ வில் டூ இட், யூ ஜெஸ்ட் ரிலாக்ஸ் !!!

கடையில போயி முட்டை வாங்கினா கரெக்கிட்டு, உடைச்சு கல்லுல ஊத்தினா ஆம்லேட்டு, எனக்கு இதுதான் வேண்டும் என பந்தியில் அமரலாம், படிக்கும் போது அமர முடியாது. விவாதங்களோ சர்ச்சைகளோ என்றுமே செயல்பாடு விதைத்ததில்லை. நம் தொடரின் நோக்கம் மிக எளிமையானது, ஆழமாய் உள் சென்று ஆன்மீகத்தின் நோக்கம் உணர்ந்து, நம் அடிப்படைகளை தரிசித்து, மிக நிச்சயமாய் நல்ல ஒரு மாற்றம் கொணரும் செயல் விதைப்பதே.

சூடம் அல்லது கற்பூரம் முகர்ந்து பார்த்திருக்கிறீர்களா. வெள்ளை உருவத்தில் மூக்கை துளைத்து ஒரு நருமணம் நம்மில் அதிரடியாய் படரும். ஆங்.... கொஞ்சம் ஸ்ட்ராங் ஸ்மெல்தான். நம்மையும் அறியாமல் கண்கள் செருகி, ஆழ்ந்த நீண்ட மூச்சு உழ் இழுத்து, உடலை தளர்த்தி அந்த வாசத்தில் அமிழ்ந்து போவோம். நிச்சயம் என்ன சிந்தனை மனதில் இருந்தாலும் எளிதில் தட்டி விட்டு மனதை ஒரு முகப் படுத்தும். தீ பற்ற வைத்தால், பட்டென பற்றி, எரிந்து முடித்து எரிந்த சுவடு இல்லாமல் இருக்கும். இது ஒரு நச்சுக் கிருமி நாசினி கூட, சில ஆயூர்வேதங்களில் அறிவியலிலும் இதன் மருந்து தன்மை பயன்படுத்தப்படுகிறது. வெறும் காற்றில் கரைந்து கூட ஒரு நறுமணத்தையும் கிருமி நாசினியாகவும் இது செயல்படும்.

இந்த கற்பூரம் ஆசியாவில் மட்டுமே இருக்க கூடிய ஒரு மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு சமாச்சாரம். அதனால் தானோ என்னவோ, இந்தியாவில் தொடங்கிய ஒரு மதத்தில் மட்டும் இது பயன்படுத்தப்படுகிறது

நம் வீடுகளில் இந்து மதம் இல்லாத வீடுகளின் ஷெல்புகளில் கற்பூரத்துக்கு இடம் உண்டா. கிடையாது. ஏன், எனும் எளிமையான கேள்விக்கு விடை காண, இந்த கற்பூரத்தின் கவர் பார்த்தால் புரியும் அதன் சூட்சமம். இந்து கடவுள் உருவங்களே பெரும்பான்மையாய் அதில் இருக்கும். அது ஏன், ஒரு பொருள் ஒரு நல்ல கிருமி நாசினி, நறுமணப் பொருள், அதெப்படி ஒரு மதத்துக்கு மட்டும் தாரை வார்க்கப்பட்டது.

கரெக்ட்டு, எனும் நம் சிந்தனைக்கு இன்னொரு அடையாளம் நினைவுக்கு வரும். அது குத்துவிளக்கு. தமிழ் கலாச்சாரத்தின் புண்ணியத்தில் குத்து விளக்கு இப்படி முழுவதும் ஒரு மத்த்தினுடைய முத்திரை குத்தப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரை குறையாய் விளக்கப் பட்டு குழப்பத்தோடே இருக்கிறது. சில இடங்களில் இதை தமிழ் எனவும் சில இடங்களில் இதை இந்துக்களின் விளக்கு எனவும் குறிக்கப்படுகிறது.

உங்கள் வீடுகளில் நெய் விளக்கு ஏற்றியிருக்கிறீர்களா. அதன் மணமும் ஒளியும் நிச்சயம் பிரத்யேகமானவை. அது போல் மஞ்சள், குங்குமம், துளசி, இன்னும் எத்தனை எத்தனையோ பொருட்கள்.

கிறிஸ்தவர்களின் மெழுகுதிரி, சாம்பிராணி, கொமஞ்சான், இஸ்லாமிய அத்தர், இன்னும் எத்தனை எத்தனை.

வாசக நேயர்களே ஒரு பொருள், அல்லது ஒரு ஒலி எப்படி ஒரு பிரிவுக்கு மட்டும் சொந்தமாகும். அதை உபயோகிக்கும் உரிமை எனக்கு மறுக்கப்படுமா.... மனிதனாய் பிறந்த நம் எல்லோருக்கும் அனுமதி உண்டல்லவா.

நல்ல விசயங்கள் பொருட்கள் எல்லாம் எல்லோருக்கும் சொந்தமானதே. அதை எங்களது என உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை, அது போல் இது அவர்களது என எதையும் ஒதுக்கும் அலட்சியமும் நமக்கு வேண்டாம். நம் தொடரின் முதல் பகுதி கேலிச் சித்திரம் சொன்னது போல், குளத்தோட கோவிச்சுகிட்டு தண்ணி குடிக்காம போனா யாருக்கு நஷ்டம்.

இனியொரு விதி செய்வோம், அதை என்னாளும் காப்போம். மதங்களின் பெயரால் என்றும் நம்மை பலவீனமாக்க அனுமதியோம். மனிதர்கள் அத்தனையும் ஒன்றே !!! எனும் ஒப்பற்ற தத்துவமே நம் தாய்மொழி. இல்லாது, நம்மை கூறு போடும் எந்த சக்தியையும் சகதியாக்குவோம், அச்சகதியின் மேல் எழுப்புவோம் நம் சக்தியின் சாம்ராஜ்யம்.

அல்வா கொஞ்சம் சூடாகி போச்சு, அடி பிடிக்கறதுக்கு முன்னால ஆற வைக்க, தொடரும் என அறிவிப்போமே.

அடுத்த பகுதியில் சந்திப்போமா....


தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக