பக்கங்கள்

எங்கேடா இருக்க

என்னோடு பள்ளியில் படித்தவர்கள். இப்போது எங்கே என்று தெரியாதவர்கள், தேடி சந்திக்கவேண்டும் என்று நான் ஆசைபடுபவர்கள்.

பங்கர கொத்து பரந்தாமன் - ஸ்டெப் கட்டிங் ஆசையால் முடி வளர்த்து எண்ணை தேய்த்து வளர்த்தவன். காதுகளுக்கு மேல் வளர்ந்து இருக்கும். காதை மறைக்கும் வரை வளர்க்க ஆசை, ஆனால் குடும்பமும் பள்ளி குழுமமும் அங்கிகரிக்காததால் ஏங்கி இருப்பவன். என்றாலும் காதுகளுக்கு மேல் வளர்ந்து இருக்கும். நடக்கும் போது பின் மண்டை முடி குதிக்கும். அதற்காவே ஒரு மாதிரி குதித்து குதித்து நடப்பான். முடி அதிகம் ஆனதால் நிச்சயம் சீப்பு வேண்டும். சீவி முடித்தவுடன் ஆள் காட்டி விரலால் மேலிருந்து தொடக்கி கீழ் வரை சுரென்று இழுப்பான். பின்னர் வாயால் ஒரு ஊது ஊதுவான். நாங்கள் எல்லாம் பொறாமையாய் பார்ப்போம்.
ஒரு நாள் பள்ளியில் தலைமை ஆசிரியர் அவன் நீண்ட முடியை கவனித்து விட்டார். தலை முடி பிடித்து நடு சபையில் அழைத்து வந்தார். கதற கதற அவசர அவசரமாக அவரே முடி வெட்டி விட அவமானத்தில் அவன் தலை கவிழ்ந்தான். முன் அனுபவம் இல்லாத பாவத்தால் முடி வெட்டு ரொம்ப சுமார். அங்கங்கே ஒரு கொத்து. அன்றில் இருந்து அவன் இப்பெயர் பெற்றான்.

நாக்கு துருத்தி
இரண்டு நடேசன் இருந்ததால் வித்தியாசப் படுத்தவேண்டிய நிர்பந்தம். பாவம் இவன் மாட்டி கொண்டான். கோபப்படும்போது நாக்கை மடித்து கண்ணை உருட்டி ஒரு பாவம் காட்டுவான். . தப்பு எதாவது செய்து விட்டால் அதற்கும் நாக்கை மடித்து கையை உதறி ஐயோ என்பான். வேறு என்ன செய்ய… நண்பர்களால் நாக்கு துருத்தி என்று அழைக்க பட்டான். மற்றொரு நடேசன் அமைதியாய் இருந்ததால் நடேசு என்று பெயர் பெற்றான்.
நுணலும் தன் வாயால் / நாக்கால் கெடும்

நார வாயன்
வாயில் காற்றை உள்ள இழுத்து இரு உதடுகளையும் குவித்து மடக்கி மேலும் கீழும் ஆட்டுவான். கிச் கிச் என்று வினோதமாய் குரல் எழுப்புவான். நாங்கள் எல்லாம் எத்தனை முயற்சி செய்தும் அத்தனை நேர்த்தி இல்லை. இதில் அவன் தான் சூப்பர். பிரத்யேகமாய் பயிற்சி எடுப்பதாய் எங்களிடம் பீத்திக் கொள்வான். என்ன பயிற்சியோ ????

கொக்கின் வாய் போலே நாரை வாய் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் வைக்க பட்டது. ஆனால் துர் நாற்றம் என்பதும் இதில் அர்த்தமாக்கப்பட்ட போது இந்த பழக்கத்தையே விட்டான். பழக்கம் போச்சு, ஆனா பேரு போகலே.

சண்டை கார மோகன்

எள்ளும் கொள்ளும் வெடிக்கும் ஒரு உறவு. அருகில் உட்காருவது இல்லை. பார்த்தால் முகம் திருப்பி கொள்வோம். எதேசையாக இடித்து கொண்டால் தூ தூ என்று துப்பி கொள்வோம்.

பரிட்ஷை எழுதும்போது ஒரு நாள் அவன் அமரும் இருக்கையில் உட்கார பணிக்க பட்டேன். உடம்பெல்லாம் ஏதோ எறும்பு ஊரும் உணர்ச்சி. சக மாணவர் எல்லாம் கேலி செய்து சிரித்தார். அவன் கூட நெளிந்து கொண்டு உட்கார்ந்தது நியாபகம் .

ஏன் இந்த பகை. ஏதோ ஒரு நாளில் புழுக்கை பென்சில் சமாசாரத்தில் வெடித்த குண்டு. இன்று நினைத்தால் சிரிப்பு வருகிறது.

1 கருத்து:

  1. பங்கர கொத்து பரந்தாமன்

    இவர் நானும் பார்க்க ஆசைப்படும் ஒரு வித்தியாசமான நபர். எங்கேனும் பார்க்க நேர்ந்தால், என் வணக்கத்தையும் சேர்த்து சொல்லுங்கள். சிறு வயதில், அவ்வளவு முடி வைத்து இருந்தவர், இந்நாளில், வழுக்கையாக இருந்தால், பார்க்கும் படுக்காளிக்கும் ஏற்படுமே நெஞ்சில் ஒரு திக்.

    நாக்கு துருத்தி :

    இவருக்கு இப்போது குறைந்தது பதினைந்து பற்கள் வெளியே எட்டிப்பார்த்து கொண்டு இருக்கும். எங்கேனும் பார்த்தால், சிறிது இடைவெளி விட்டு நின்று பேசுவது தங்கள் உடல்நலத்திற்கு நல்லது.

    நார வாயன் :

    இவன போல பல கோடி பேருங்க நம்மள சுத்தி உலாவரானுங்க சார்.

    சண்டைக்கார மோகன் :

    அந்த நிகழ்ச்சி நீங்க சொன்ன போது, அக்னி நட்சத்திரம் படத்துல வர கார்த்திக்-பிரபு போல இருந்தது. கடைசி வரைக்கும் சமாதானமே ஆகலியா??

    இவிங்க எல்லாம் இப்போ எங்க இருக்காங்களோ, என்ன பண்றாங்களோ??

    இவர்களை தேடி பார்த்தால் ஒரு நாள் இல்லை, ஒரு நாள் ஏதாவது விடை கிடைக்கும்
    இல்லையென்றால் கடையில் வடையாவது கிடைக்கும் (டிபனுக்கு ஆச்சு!!)

    பதிலளிநீக்கு